Archives: மார்ச் 2025

உறுதியான இளைப்பாறுதல் தேவனில்

சீனாவின் புஜியனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் மிகவும் நன்றாகத் தூங்க உதவ விரும்பினர். அவர்கள் ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு சூழலில், சோதனை பொருட்களின் மீதான தூக்க விளைவுகளை அளந்தனர். பிரகாசமான, மருத்துவமனை தர விளக்குகள் மற்றும் இயந்திரங்களின் சத்தங்கள் மற்றும் செவிலியர்கள் பேசும் ஆடியோ பதிவுகளுடன் முழுமையான சோதனை அது. தூக்கக் கவசங்கள் மற்றும் காது செருகிகள் போன்ற கருவிகள் சோதனை பொருட்களின் ஓய்வை மேம்படுத்துவதாக அவர்களின் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் உண்மையான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள உண்மையிலேயே நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, அமைதியான தூக்கம் இன்னும் கடினமாக இருக்கும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நம் உலகம் நிலைகுலைகையில், நாம் எப்படி ஓய்வெடுப்பது? வேதம் தெளிவாகக் கூறுகிறது: தேவனை நம்புபவர்களுக்கு அவர்களின் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட சமாதானம் இருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி, பூர்வ இஸ்ரவேலர்ககளின் துன்பங்களுக்குப் பிறகு மீட்கப்படும் எதிர்காலத்தைப் பற்றி எழுதினார். அவர்கள் தங்கள் பட்டணத்தில் பாதுகாப்பாக வாழ்வார்கள், ஏனென்றால் அதைக் தேவன் காப்பாற்றினார் என்பதை அறிந்திருந்தார்கள் (ஏசாயா 26:1). அவர்களைச் சுற்றியுள்ள சூழலில் நன்மையைக் கொண்டுவர அவர் ஆற்றலுடன் இயங்குவதை அவர்கள் நம்புவார்கள். "அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்”, ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார், நீதியைக் கொண்டுவருகிறார் (வவ. 5-6). "கர்த்தர்தாமே நித்தியமான கன்மலை" என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் அவரை என்றென்றும் நம்பலாம் (வ. 4).

ஏசாயா எழுதினார்: “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” (வச. 3). இன்றும் தேவன் நமக்கு அமைதியையும் இளைப்பாறுதலையும் வழங்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அவருடைய அன்பு மற்றும் வல்லமையின் உறுதியில் நாம் இளைப்பாறலாம்.

செய்ய அல்லது செய்யக்கூடாதவை

நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.

நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.

தேவனுக்கு வேறு திட்டங்கள் இருந்தன

அவர்களின் துல்லியமான வயது தெரியவில்லை. தேவாலயத்தின் படிகளில் ஒருத்தி கண்டெடுக்கப்பட்டாள்; மற்றவளுக்கோ அவள் கன்னியாஸ்திரீகளால் வளர்க்கப்பட்டவள் என்பது மட்டுமே தெரியும். இரண்டாம் உலகப் போரின்போது போலந்தில் பிறந்து, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாக ஹலினா அல்லது கிறிஸ்டினா ஒருவரையொருவர் பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் மரபணு பரிசோதனை முடிவுகள் அவர்கள் சகோதரிகள் என்பதை வெளிப்படுத்தியது, மற்றும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைவதற்கு வழிவகுத்தது. இது அவர்களின் யூத பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தியது அவர்கள் ஏன் கைவிடப்பட்டனர் என்பதை விளக்குகிறது. தீயவர்கள் சிறுமிகளை அவர்களின் அடையாளத்தின் காரணமாகக் கொல்ல முயன்றிருந்தனர்..

பயந்துபோன ஒரு தாய், சாகப்போகும் தன் குழந்தைகளை அவர்கள் மீட்கப்படக்கூடிய இடத்தில் விட்டுவிடுவது என்பதைக் கற்பனை செய்தால், மோசேயின் கதையை நினைவுபடுத்துகிறது. ஒரு எபிரேய ஆண் குழந்தையாக, அவர் இனப்படுகொலைக்காகக் குறிக்கப்பட்டார் (யாத்திராகமம் 1:22 ஐப் பார்க்கவும்). அவரது தாயார் தந்திரமாக அவரை நைல் நதியில் விட்டுவிட்டார் (2:3), அவருக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். மோசேயின் மூலம் தம்முடைய மக்களை மீட்பதற்கு அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு திட்டத்தைத் தேவன் வைத்திருந்தார்.

அமைதிக்கான அழுத்தம்

வாழ்க்கையின் மிகப்பெரிய அழுத்தங்களில் ஒன்று வீட்டை மாற்றுவது. நான் எனது முந்தைய வீட்டில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வசித்த பிறகு, எங்கள் தற்போதைய வீட்டிற்குச் சென்றோம். நான் திருமணத்திற்கு முன் எட்டு வருடங்கள் அந்த முதல் வீட்டில் தனியாக வாழ்ந்தேன். பின்னர் என் கணவர் தனது எல்லா பொருட்களுடன் இனைந்தார். பின்னர், ஒரு குழந்தையைப் பெற்றோம், இன்னும் அதிகமான பொருட்கள் சேர்ந்தது.

நாங்கள் புதிய வீட்டிற்கு போன நாளிலும் கூட அமைதியில்லை. வீட்டை மாற்றும் பணியாளர்கள் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னும்கூட, நான் இன்னும் புத்தகத்தை எழுதி முடித்துமே கொண்டிருந்தேன். புதிய வீட்டில் பல படிக்கட்டுகள் இருந்தன, எனவே திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு நேரம் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் அன்றைய நிகழ்வுகளால் நான் மன அழுத்தத்தை உணரவில்லை. பின்னர் அது என்னைப் பாதித்தது, ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கப் பல மணிநேரம் செலவழித்தேன். வேதம் மற்றும் வசனங்களின் கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம். தேவனின் கிருபையால், நான் தக்க நேரத்தில் முடிக்க வேதத்தைப் பார்த்து, ஜெபித்து, எழுதினேன். எனவே, வேதத்திலும் ஜெபத்திலும் நான் மூழ்கியதே காரணம் என்று நான் நம்புகிறேன்.

பவுல் எழுதினார், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று. நாம் ஜெபித்து, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கையில்” (வ. 4). பிரச்சினை மீதிருக்கும் நம் கவனத்தை நம் அருள் நாதரிடம் திருப்புகிறோம். மனவழுத்தத்தைச் சமாளிக்க உதவும்படி நாம் தேவனிடம் கேட்கலாம், ஆனால் நாம் அவருடன் இணைகிறோம், இது " எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம்" (வ. 7) அளிக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

தி இண்டியாமேன்

1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.

எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.